கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி 1000 பைக்குளில் காங். பேரணி
நாகர்கோவில்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி 1000 பைக்குகளில் பேரணி செல்லவிருப்பதாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது.
இந்த விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் தற்போது மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது தொடர் கதையாகிவிட்டது. தமிழகத்தில் மின் தடையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையம் கண்டிப்பாக வரவேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் தான் தமிழ்நாடு வளரும், இந்தியா வளரும். இதனால் அந்த பகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும். நாகர்கோவிலில் இருந்து 1000 பைக்குகளில் கூடங்குளத்திற்கு செல்வோம். இதற்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றார்.