சிரியாவில் அதிபருக்கு எதிரான மோதலில் 3500 பேர் பலி- ஐநா தகவல்

சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் பதவி விலக வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ராணுவம் நடத்தும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.சபை தீவிர முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து அரபு கூட்டமைப்பு மூலம் அதிபர் ஆசாத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும். நகர்புறங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்றவை அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 550 பேர் மட்டுமே பக்ரீத் பண்டிகையின்போது விடுவிக்கப்பட்டனர். இன்னும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். மேலும், ராணுவமும் வாபஸ் பெறவில்லை.
ஹோம்ஸ் நகரில் டாங்கிகள் மூலம் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த பிறகும் கூட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 3,500 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தகவலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உயர் கமிஷனின் செய்தி தொடர்பாளர் ரவீணா ஷம்தாஜினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications