அணு ஆயுதங்களுடன் 3500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி
டெல்லி: அதிகரித்து வரும் சீன மிரட்டலுக்கு மத்தியில், இந்தியா தனது அதி நவீன அக்னி ஏவுகணையை ஏவி சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைக் குறி பார்த்து தாக்கக் கூடிய வல்லமை இந்த அக்னிக்கு உண்டு. மேலும், இது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அக்னி வரிசையில் இது நான்காவது தலைமுறை ஏவுகணையாகும்.
பல்வேறு மேம்பாடுகளுடன் கூடிய இந்த அதி நவீன அக்னி-4 ஏவுகணை, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளைக் குறி வைத்துத் தாக்கக் கூடியது. இந்த சோதனையின் வெற்றி இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை மேம்பாட்டுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அக்னி-5 ஏவுகணையானது கிட்டத்தட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தரத்தையம், திறனையும் ஒத்ததாக இருக்கும். 5000 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய வல்லமை இதற்கு இருக்கும்.
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் அவினாஷ் சந்தர் கூறுகையில், அக்னி 4 ஏவுகணை வெற்றியானது, அக்னி 5 ஏவுகணை திட்டத்திற்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. விரைவில் அக்னி 5 ஏவுகணை ஏவப்படும் என்றார்.
பெருமை பெற்ற டெஸ்ஸி தாமஸ்
அக்னி-4 ஏவுணைத் திட்டமானது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண் வி்ஞ்ஞானியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர்தான் டிஆர்டிஓவின் முக்கியத் திட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் வி்ஞ்ஞானி ஆவார். குறிப்பாக ஏவுகணைத் திட்டங்களில் ஆண்களின் ஆதிக்கமே உள்ள நிலையில் அதைத் தகர்த்து பெண் வி்ஞ்ஞானியாக இந்தத் திட்டத்தின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்னி 4 ஏவுகணையானது அக்னி-2 பிரைம் என்ற பெயரில் பரிசோதிக்கப்பட்டது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது அத்திட்டம் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவிடம் அக்னி 1 (700 கிலோமீட்டர்), அக்னி 2 (2000 கி.மீட்டருக்கும் கூடுதல் தொலைவு பாயக் கூடியது), அக்னி -3 (3500 கிலோமீட்டர்) ஆகியவை உள்ளன. இதில் முதல் இரண்டு அக்னி ஏவுகணைகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. 3வது அக்னியை சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மூன்று ஏவுகணைகளுமே பாகிஸ்தானைக் குறி வைத்து இந்தியாவால் உருவாக்கப்பட்டவையாகும். தற்போது உருவாகியுள்ள அக்னி 4 ஏவுகணையானது சீனாவைக் குறி வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் ஏவுகணைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவை விட பாகிஸ்தானின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. சீனாவிடமிருந்தும், வட கொரியாவிடமிருந்தும் பெற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அது நம்மை விடஒரு படி உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதே உண்மை.
அதேபோல சீனாவும் நம்மை விட அதி பயங்கர ஏவுகணைகளை வைத்துள்ளது. 11,200 கிலோமீட்டர் பாய்ந்து தூக்கக்கூடிய டாங் பெங்க் 31ஏ, இந்தியாவின் எந்த ஒரு நகரத்தையும் குறி வைத்துத் தாக்கக் கூடிய திறன் கொண்டதாகும். இருப்பினும் இந்தியா தற்போது சீன நகரத்தைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒரு ஏவுகணையாக அக்னி 4ஐ உருவாக்கியுள்ளது சீனாவுக்கு சற்றே கவலை தரக் கூடிய விஷயமாகும். காரணம், இதுவரை நம்மிடம் எதுவும் இல்லாமல் இருந்தது, தற்போது இருக்கிறது என்பதே.
அக்னி 2 மற்றும் 3ஐ விட அக்னி 4 சற்று இலகு ரகமானதாகும். இந்த சோதனை சிறப்பாகவும், குறிப்பிட்ட இலக்குகள் எட்டப்பட்டதாகவும் டிஆர்டிஓ வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுபோலமேலும் பல பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் இதைமுழு வெற்றி என்று டிஆர்டிஓ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.