2வது கட்ட மழை தொடங்கியது- திருவாரூர் புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரகாலமாக சற்று ஓய்வெடுத்த வடகிழக்கு பருமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அதிகாலையில் மழை தொடங்கியதால் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். காலை நேரத்திலும் மழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு கிளம்பிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இடியுடன் கன மழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது. இது குறித்து ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது:
இலங்கை, தமிழகம், ஆந்திரா கடற்கரையை ஒட்டிய வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். சென்னையின் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று ரமணன் கூறியுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட ஊர்களிலும் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை சாரல் மழையாக நீடிக்கிறது. கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.