சிங்கப்பூரில் ஜவஹர்லால் நேரு சிலை: திறந்து வைத்தார் மன்மோகன் சிங்
சிங்கப்பூர்: இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவு மேம்பட பாடுபட்ட முன்னாள் பிரதமர் நேருவுக்கு சிங்கப்பூர் அரசு சிலை வைத்துள்ளது. அந்த சிலையை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இடுப்பளவு சிலை வைத்துள்ளது. இந்த சிலை நதிக்கரையோரம் உள்ள ஏசியன் சிவிலைசேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
இந்த சிலையை இந்திய சிற்பி பிமன் பிஹாரி தாஸ் செதுக்கியுள்ளார்.
இது குறித்து தேசிய பாரம்பரிய வாரியத்தின் தலைவர் ஓங் யேய் ஹுவாட் கூறியதாவது,
நேரு 3 முறை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது 3 பயணங்களுமே இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உறவை வலுப்படுத்த உதவியுள்ளது. தற்போது நேருவுக்கு சிலை வைத்திருப்பதன் மூலம் இந்த இரு நாடுகளின் நட்பு மேலும் வலுப்படும் என்று நம்புகிறோம் என்றார்.
போலந்து எழுத்தாளர் ஜோசப் கான்ரட், நவீன வியட்நாமின் தந்தை ஹோ சி மின், பிலிப்பைன்ஸ் புரட்சித் தலைவர் ஜோஸ் ரிசால் மற்றும் சீன தலைவர் டெங்க் ஜியோ பிங் ஆகிய 4 வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே சிங்கப்பூரில் சிலை உள்ளது. தற்போது அந்த பட்டியலில் நேருவும் சேர்ந்துள்ளார்.
நேரு 1937ம் ஆண்டு மே மாதம தான் முதன் முதலாக சிங்கப்பூர் சென்றார். அடுத்து 1946ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 1950ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.