விலையை உயர்த்திவிட்டு திமுக மீது பழிபோடக்கூடாது - ஜெ.வுக்கு திருமா கண்டனம்
மேலும் கட்டண உயர்வுக்காக திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை வழங்கக் கூடிய வகையில், அதிமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பால் விலை உயர்வுக்கும், பேருந்து கட்டண உயர்வுக்கும் கடந்த கால திமுக அரசு தான் காரணம் என்று அந்த ஆட்சியின் மீது பழி சுமத்தி, அதை நியாயப்படுத்துவதற்கு முதல் அமைச்சர் முயற்சி செய்கிறார். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. விலை உயர்வுக்கு எப்படி நியாயப்படுத்தினாலும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருமாவளவன் தெரிவித்தார்.