தலாய்லாமா விவகாரம் இந்தியா – சீனா எல்லை பேச்சு ரத்து
புது டெல்லி: தலாய்லாமா தலைமையில் புது டெல்லியில் நடக்க உள்ள புத்தமதக்கூட்டத்தை ரத்து செய்யுமாறு சீனா விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. இதனால் இம்மாத இறுதியில் இந்தியா-சீனா எல்லை தொடர்பான பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா பங்கேற்க உள்ள புத்த மத மாநாடு, அடுத்தவாரம் புது டெல்லியில் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தலாய்லாமா சிறப்பு உரையாற்றுகிறார். இந்த மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதனை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இது மதம் தொடர்பான நிகழ்ச்சி என்றும், அரசியல் தொடர்பான நிகழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்த இந்தியா மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது.
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இதன் காரணமாக இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பாக இரு நாட்டு, சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெற இருந்த பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் சீனாவின் சிறப்பு பிரதிநிதி டாய் பிங்காவோவும், இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி சிவசங்கர் மேனனும் டெல்லியில் சந்தித்து இந்திய-சீன எல்லையோரம் குறித்து 15ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த பேச்சுவார்தை தலாய்லாமா விவகாரத்தினால் தடைபட்டுள்ளது.