சென்னையில் பிடிபட்ட 2 பேரும் தமிழகத்தில் தீவிரவாத சதிச் செயலுக்குத் திட்டமிடவில்லை- போலீஸ் விளக்கம்
சென்னை: சென்னை சேலையூரில் பிடிபட்ட முகம்மது அஷரத் கான் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அப்துல் ரஹ்மான் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் டெல்லியில் உள்ளன. இருவரும் தமிழகத்தில் தீவிரவாத சதிச் செயலுக்குத் திட்டமிடவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சேலையூரில் பதுங்கியிருந்த முகம்மது அஷரத் கான் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறையின் கோரிக்கையின் பேரில் சென்னை போலீஸார் கைது செய்து டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இவர்களில் அஷரத் கானுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தக் கைது குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை தரப்பில் கூறுகையில்,
டெல்லியைச் சேர்ந்த முகம்மது அஷரத் கான் டெல்லியைச் சேர்ந்தவர். அவர் மீது கள்ள நோட்டுக்கள், ஆயுதப் பதுக்கல், போலி பாஸ்போர்ட் விநியோகம் என பல வழக்குகள் உள்ளன.
அவர் சென்னையில் பதுங்கியுள்ளதாகவும், பிடித்துத் தருமாறும் டெல்லி காவல்துறை கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் அஷரத் கானையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அப்துல் ரஹ்மானும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருந்த அறையில் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. இவர்கள் இருவரும் தமிழகத்தில் எந்தவிதமான தீவிரவாத சதிச் செயலுக்கும் திட்டமிடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications