கோட்டலை வனத்தில் புல் சேகரிக்க சென்ற வாலிபரை கரடி தாக்கியது
புளியங்குடி: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஈச்சம்புல் சேகரிக்க சென்ற பழங்குடியின வாலிபரை கரடி கடித்து குதறியது. காயமடைந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோட்டமலை வனப்பகுதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் உள்ள காட்டுநெல்லி, தேன், ஏலக்காய், குங்கிலியம், ஈச்சம்புல் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஞாயிறுக்கிழமையன்று கோட்டமலை பகுதியை சேர்ந்த சவரிமுத்து மகன் ஜேம்ஸ் என்பவர் 2 வேட்டை நாய்களுடன் ஈச்சம்புல் சேகரிக்க சென்றார். அப்போது திடீரென அங்கு வந்த கரடி ஜேம்சை தாக்கியது. இதனை பார்த்த வேட்டை நாய்கள் கரடியை துரத்தின. இருந்தபோதும் ஜேம்சின் தாடை மற்றும் கழுத்து பகுதியை கரடி கடித்து குதறியது. ரத்தம் சொட்ட சொட்ட கரடியின் பிடியிலிருந்து ஜேம்ஸ் தப்பி வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த பழங்குடி இன மக்கள் சங்க மாவட்ட தலைவல் செல்லையா, அவரது மகன் தினகரன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாசுதேவநல்லூரிலிருந்து வந்த 108 ஆம்புலன்சில் ஜேம்சுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜேம்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.