கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்
சென்னை: டெல்லி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள 250 டன் சந்தன மரம் மற்றும் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்த 2 முக்கிய குற்றவாளிகளை வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சந்தன மரங்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் இருந்து சந்தன மரங்கள் மற்றும் செம்மரங்களை வெட்டி டெல்லிக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் டெல்லியில் இருந்து சீனா, மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டெல்லியில் உள்ள சில குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள 250 டன் சந்தன மரம் மற்றும் செம்மர கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சந்தன மரங்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து நடத்திய விசாரணையில், நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரை சேர்ந்த மைதீன்(46) என்பவர் சந்தன மரங்களை கடத்தும் திட்டத்துடன் டெல்லியில் குடோனை வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது.
சென்னையில் உள்ள ஒரு லட்ஜில் தங்கியிருந்த மைதீனை கைது செய்ய சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் மைதீன் அதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு, பூனே செல்லும் விமானத்தில் ஏற வந்த மைதீனை, வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
மைதீன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான செல்லதம்பி(35) என்பவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது.












Click it and Unblock the Notifications