வரும் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு- வணிகர்கள் உண்ணாவிரதம்!!
இது குறித்து பேரவையின் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வணிகத் துறையில் அன்னியர்களை அனுமதித்துவிட்ட மத்திய அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு வணிகர்களின் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறோம். இது வணிகர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல.
நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், மக்கள் நலன் ஆகியவற்றோடு சம்மந்தப்பட்ட பிரச்சனை. எனவேதான் தமிழ்நாட்டுக்குள்ளே அன்னியர்களை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த உறுதிமிக்க முடிவின் பின்னே ஒட்டு மொத்த இந்தியாவே எழுந்து நிற்கும்.
அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு பெரிதும் காரணம், ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் மற்றும் தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கைதான். எனவே இவற்றை முறியடிக்க வேண்டும்.
அனைத்து மாநில முதல்வர்களிடமும் தமிழக முதல்வர் பேச்சு நடத்தி எந்த மாநிலத்திலும் அன்னியர்கள் கால் பதித்துவிடாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அன்னியர்கள் ஏற்கனவே கால் ஊன்றிவிட்ட வங்கிகள், ஆயுள் காப்பீடு, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை முறியடிக்கவும் இதுதான் சரியான தருணம்.
இதற்கான முயற்சியை முயற்சிசயை தமிழக முதல்வர் முன்னின்று நடத்திட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணாவதாகவும், அதைத் தடுக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைப்பதற்குத்தான் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
ஆனால் இந்த வகையில் ஒரு முறை 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க முடியும் என்ற வல்லுனர்களின் கருத்தை மத்திய அரசு மதிக்கவில்லை.
தங்களால் இயலாது என்று அன்னியர்களை அனுமதிக்க முடிவு செய்துவிட்ட பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்.
வரும் 1ம் தேதி பேரவை சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். எல்லா மாவட்டங்களிலும் வணிகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை பெருநகரிலும் வணிகர்கள் முழு கடையடைப்பு செய்து அண்ணாசாலை காயிதே மில்லத் கலைக் கல்லூரியை அடுத்த கூவம் நதிக்கரையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒட்டு மொத்த வணிகர்களும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.