திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது ரூ.14 லட்சம் மோசடி புகார்
சென்னை: ஒப்பந்தப் பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ரூ.14 லட்சம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக காண்டிராக்டர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முருகன்(59). பொதுப்பணித் துறையில் பதிவு பெற்ற காண்டிராக்டரான முருகன், மதுரை, விருதுநகர் பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாருதல், வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றார்.
இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஒப்பந்தப் பணிகளை வாங்கித் தருவதாக கூறி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தன்னிடம் ரூ.14 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
எனக்கு ஒப்பந்த பணிகளைத் தருவதாக கூறியதன் பேரில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரூ.14 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் எந்த வேலைகளையும் தராமல் ஏமாற்றிவிட்டார்.
இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டபோது வேலை கொடுக்க சொல்வதாக கூறினார். நானும் அதனை நம்பி விருதுநகர், மதுரை பொதுப்பணித்துறை அலுவலகங்களில் சென்று விசாரித்தபோது எந்த தகவலும் வரவில்லை என்று தான் பதில் சொன்னார்கள்.
துரைமுருகனை பொதுப்பணித்துறை பொறுப்பில் இருந்து மாற்றிய பிறகு அவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால் என்னிடம் எதுவும் பேசாமல் துரைமுருகன் சென்றுவிட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவரது வீட்டுக்கு மீண்டும் சென்றபோது அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார் என்று கூறினார்கள்.
கடந்த 2ம் தேதி காலையில் கோட்டூர்புரம் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தேன். அப்போது எனக்கு தர வேண்டிய ரூ.14 லட்சம் பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். ஆனால் எனக்கு பணம் எதுவும் தர வேண்டியதில்லை என்று கூறிவிட்டார்.
என்னை நம்ப வைத்து ரூ.14 லட்சம் மோசடி செய்த துரைமுருகன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.