லீவ் போடாமல் ஆபிஸ் வரும் ஊழியர்களுக்கு பரிசு + நற்சான்றிதழ்: மின் வாரியம் அறிவிப்பு
சென்னை: அநாவசியமாக லீவு எடுக்காமல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பரிசும் நற்சான்றிதழும் வழங்க தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தலைக்கு மேல் உள்ள கடனால் சமாளிக்க முடியாத அளவுக்கு தத்தளித்து வரும் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து 40 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தினமும் வருகைப் பதிவேடு பராமரித்தல், சரியான மீட்டர்கள் பொருத்தி, 100 சதவீதம் கணக்கிடுதல், பிரச்னைகள் குறித்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, நிலைமையை சரி செய்தல் உள்ளிட்டவையாகும்.
அநாவசிய லீவு கூடாது
இதற்கிடையில், மின் வாரியத்தில் உள்ள, அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே, பணியில் சிறப்பாக செயல்படும் ஒருவரை மாதம்தோறும் தேர்ந்தெடுத்து, அவருக்கு, பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிபந்தனையே, அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது; அலுவலக நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.
நன்மதிப்பும் நற்சான்றும்
"நிறுவனத்திற்கு நன்மதிப்பை தேடித் தருபவர்' என்ற பெயரில், இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை உற்பத்திப் பிரிவு இயக்குனர் தலைமையில், தேர்வுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியினர், ஒவ்வொரு பிரிவு வாரியாக வரும் பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களில், மாதந்தோறும் ஒருவரை தேர்ந்தெடுப்பர். தேர்வாகும் நபருக்கு, மாதத்தின் கடைசி பணி நாளில், பரிசும், சான்றிதழும் தரப்படும்.
தற்போது மின்சார மீட்டர் பழுது ஏற்பட்டு, அதுகுறித்து மின் வாரிய அலுவலகங்களில் புகார் கொடுத்தால் அதை சரிவர கவனிப்பதில்லை. காசு கொடுத்தால்தான் அந்தப் புகாரையே கையில் எடுக்கின்றனர். அதேபோல இன்ன பிற பணிகளுக்கும் கூட லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது. இதையும் சரி செய்து, லஞ்சம் வாங்காமல் தங்களது பணிகளை முறையாக, சரியாக, ஒழுங்காக கவனித்தாலே மின்வாரியத்திற்கு பெருமளவில் இழப்புகள் குறையும். இதையும் கவனிக்க ஒரு குழுவை மின்வாரியம் அமைத்தால் அப்பாவி மக்களும் தப்பிப்பார்கள், மின்வாரியமும் தனது நஷ்டத்திலிருந்து மீள உதவியாக இருக்கும்.