சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு-காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது
டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
அதே போல திமுக, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்துக்கு எதிராக எதிர்க் கட்சிகள் செய்து வரும் அமளியால் இன்றும் 8வது நாளாக நாடாளுமன்றம் இயங்கவில்லை.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரையே நிறுத்தி வைக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் கூறி வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி சற்றும் எதிர்பாராத வகையில், அன்னிய முதலீட்டுக்கு அந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள எம்பியான ரமேஷ் சென்னிதாலா சில்லறை வணிகத்துறையில் அன்னிய முதலீடு கூடாது என்று வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தார்.
இவரைத் தொடரந்து இன்னொரு எம்பியான சஞ்சய் சிங் தனது எதிர்ப்பை தலைவர்களிடம் தெரிவித்தார்.
இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பரேலி தொகுதி எம்பியான பிரவீன் சிங் அரூண், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கே நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் நகலை பத்திரிக்கைகயாளர்களிடம் தந்துள்ளார் அரூண்.
தனது கடிதத்தில், நேரடி முதலீடு விஷயத்தில் மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபமும், உள்நாட்டு வணிகர்கள் நஷ்டமும் அடைய விடக் கூடாது. சீனாவிலிருந்து பொருட்களைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டிவிடாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதே போல இன்னொரு மூத்த தலைவரான அனில் சாஸ்திரி தனது ட்விட்டரில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவை எடுக்கும் முன் காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.