இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் குவிப்பு- தீவிர வாகன சோதனை
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் தாக்குதல் நடத்தாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் ஆசிப், போலீஸ் ஃபக்ருதீன் ஆகியோர் ஏதாவது நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்று போலீசார் கருதுவதால் இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 12,000 போலீசாரும், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சோதனை:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மார்க்கெட்டுகள், திரையரங்குகள், ஷாப்பிங்மால்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோப்ப நாய்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனையும் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று விடிய, விடிய வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. பக்கத்து வீடுகளில் யாராவது சந்தேகிக்கும்படி தங்கியிருந்தாலோ, வாகனம் மற்றும் பொருட்கள் அனாதையாகக் கிடந்தாதலோ உடனே அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.