மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. கச்சா எண்ணெய்!
லண்டன்: ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து நாளை அந் நாடுகளின் தலைவர்கள் கூடிப் பேச இருப்பதையடுத்து உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை லேசாக உயர்ந்துள்ளது. (விலையை உயர்த்த என்னென்ன காரணம் கண்டுபிடிக்கிறார்கள்!).
கடந்த ஒருவாரமாக கச்சா எண்ணெய்யின் விலை லேசாக சரிந்து கொண்டே வந்தது. இந் நிலையில், நாளை நடக்கவுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டத்தைக் காரணம் காட்டி, அதன் விலை சிறிய அளவில் (0.6% தான்) உயர்ந்தது.
விலை மேலும் அதிகமாக உயராததற்குக் காரணம், நாளை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடக்கவுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் அந்த நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு ஏதும் காணப்படாது என்ற நம்பிக்கை தான் காரணம்!. அந்த நாடுகளில் நிதிப் பிரச்சனை தொடரத்தான் போகிறது என்ற 'நம்பிக்கை' காரணமாக பங்குச் சந்தை யூக வியாபாரிகள் விலையை மேலும் உயர்த்தவில்லை.
பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தால், எரிபொருள் தேவையும் குறைவாக இருக்கும். இதனால் கச்சா எண்ணெய்க்கு பெரிய அளவில் டிமாண்ட் அதிகரிக்காது, இதனால் விலையை அதிகமாக உயர்த்த வேண்டியதில்லை.. இது தான் பங்குச் சந்தை வியாபாரிகளின் லாஜிக்.
அதே நேரத்தில் ஐரோப்பாவில் நிலவும் சிக்கல்களால் கச்சா எண்ணெயின் விலையில் பெரிய அளவில் சரிவும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம், ஈரான்.
அணு ஆயுத தயாரிப்பை காரணம் காட்டி ஈரான் மீது மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவும் ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு விரைவிலேயே சர்வதேச அளவில் டிமாண்ட் உருவாகும் என்ற நம்பிக்கையில் அதன் விலை பெரிய அளவில் சரியவும் இல்லை.
அதாவது.. சரிந்தும் சரியாத கச்சா எண்ணெய் விலை.. என்பது தான் விஷயம்!