முல்லை பெரியாறில் புதிய அணை-மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: -அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக் கோரி இடுக்கி மாவட்டத்தில் வண்டிபெரியார்,சாப்பத்து உள்பட பல பகுதிகளில் அனைத்து கட்சி சார்பில் போரட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் புதன்கிழமையன்று வண்டிபெரியாறில் 1 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,
முல்லை பெரியாறு அணை கட்டி 116 வருடங்கள் ஆகிறது. உலகில் இதை போன்று பழமையான அணை மிகவும் குறைவாகும். 1979ம் ஆண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழகம் கேரள அதிகாரிகள் சேர்ந்து புதிய அணை கட்ட இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அதற்கு பின்னர் அணை கட்ட தமிழக அரசு மறுத்து வருகிறது. புதிய அணை கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில தினங்களாக தமிழக கேரள எல்லையில் நடந்து வரும் சம்பவங்கள் துரிஷ்டவசமானது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். சில தினங்களுக்கு முன் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மதகை இளைஞர் காங்கிரசார் உடைக்க முயன்றனர். இதன் பின்னர்தான் தமிழ்நாட்டிலும் வன்முறை ஏற்பட்டது.
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக கேரள மக்களிடையே வெறுப்புணர்ச்சி இருக்க கூடாது. எனவே இதுபோன்ற வன்முறை போராட்ட சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்றார்.