புதுச்சேரி, கும்பகோணத்தில் மலையாளிகளை எதிர்த்து தமிழர்களம் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி, கும்பகோணம் பகுதிகளில் தமிழர்களம் சார்பில் மலையாளிகளின் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகம், கேரளா மாநில மக்களின் உணர்வைகளை தூண்டி வருவதால் 2 மாநிலங்களிலும் பொதுமக்களின் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் தமிழர்களத்தின் சார்பில் பல இடங்களில் உள்ள மலையாளிகளின் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதேபோல் கும்பகோணத்திலும் தமிழர் களத்தினர் மலையாளி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். தமிழினம் சாது தான் அது மிரண்டால் இந்தியா தாங்காது என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தமிழர்களம் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தின் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று எழுச்சி முழக்கமிட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடந்த 1956ல் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட நிலப் பகுதிகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழர் இழந்த நிலப் பகுதிகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கமிட்டனர்.