தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை அருகே தாம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் திமுக பொருளாளர் ஸ்டாலின் கேரளாவை எச்சரித்துப் பேசினார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையிலும், தாம்பரத்தில் தாலுகா அலுவலகம் அருகே பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும் உண்ணாவிரதம் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள், நகரங்களில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
5 மணிக்கு கருணாநிதி முடித்து வைக்கிறார்
அன்பழகனின் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி முடித்து வைக்கிறார்.
ஸ்டாலினுடன், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தென் தமிழக மக்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்-ஸ்டாலின்
தாம்பரத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
கேரளாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை மனதில் வைத்தே முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை கேரள கட்சிகள் கிளப்புகின்றன. தென் தமிழக மக்களின் வாழ்க்கையோடு யாரும் விளையாட வேண்டாம்.
இரு மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 15ம் தேதி முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்தை மனதில் வைத்தே அன்று தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.