இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை
கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய இந்தத் தளத்தை அமைக்கவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் ஏற்கனவே இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.
இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும்.
ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் சீனா காலை வைத்துவிட்டது. இந்தக் கடல் பரப்பில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு இதற்கான அனுமதியை ஐ.நா.வின் சர்வதேச கடல்படுகை ஆணையம் (International Seabed Authority) வழங்கிவிட்டது.
(பார்க்க: இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடிக்கை பார்க்கும் இந்தியா!)
இதனால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கப்பல்கள் எந்த் தடையும் இல்லாமல் வந்து போகலாம். போர்க் கப்பல்கள், உளவு பார்க்கும் கப்பல்களைக் கூட சீனா இந்தப் பிராந்தியத்தில் தடையில்லாமல் இயக்கலாம். கேட்டால், இது கனிமத்தை தோண்டியெடுக்க உதவும் ஆய்வுக் கப்பல் என்று சீனா சொல்லிவிடும்.
இந் நிலையில் இந்தியாவை மேற்குப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க ஷெசல்ஸ் தீவில் அமைக்கப்படும் ராணுவத் தளம் சீனாவுக்கு உதவும்.
இந்த மாதத் துவக்கத்தில் ஷெசல்ஸ் நாட்டுக்கு 'நல்லெண்ணப் பயணமாக' சென்ற சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பியுள்ளார். ராணுவத் தளம் மட்டுமின்றி, ஷெசல்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
சேமாலியாவை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த சீனாவின் இந்தத் தளம் உதவும் என ஷெசல்ஸ் கூறியுள்ளது.
இதையெல்லாம் கவலையோடு பார்த்துக் கொண்டு, கையை பிசைந்து கொண்டுள்ளது இந்தியா, குறிப்பாக இந்தியக் கடற்படை.