முதுமலை யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது- 37 யானைகள் பங்கேற்பு
கோவை: முதுமலை யானைகள் சிறப்பு முகாம் இன்று துவங்கியது. 37 யானைகள் பங்கேற்ற இந்த முகாம் 48 நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் மற்றும் தனியார் பராமரிப்பில் உள்ள யானைகளுக்கு முதுமலையில் இன்று சிறப்பு முகாம் துவங்கியது. இந்த முகாமிற்காக வந்த 37 யானைகளுக்கு மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில் டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். யானைகளை பராமரித்து வரும் பாகன்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்பிறகு இரவு ஓய்வு அளிக்கப்பட்டு, அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. முதுமலையில் இன்று துவங்கிய யானைகள் சிறப்பு முகாம், தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும்.
முதுமலைக்கு வந்த யானைகளுக்கு, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர் ஹாஜா வரவேற்பு அளித்தார். யானைகள் முகாமின் நுழைவாயிலில் யானைகளின் எடை பரிசோதிக்கப்பட்டது. மேலும் யானைகளுக்கு நோய் கிருமிகள் தாக்கத்தை தடுக்க, சோடியம் பை கார்பைட் கலந்து நீர் தெளிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால் கூறுகையில், 48 நாட்கள் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில், யானைகளுக்கு உணவு, மருந்துகள், புத்துணர்வு சிகிச்சைகள் வழங்கப்படும், என்றார்.