பெண் கொலையில் இருவர் கைது – ஆன் லைன் விபச்சாரம் செய்தது அம்பலம்
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் தொழில் அதிபர் மனைவியை கொலை செய்து, நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருமுல்லைவாயல், வெங்கடாச்சலம் நகரைச் சேர்ந்தவர் லியாகத்அலி. தொழில் அதிபரான இவருக்கு சென்னை பாடியில் லேத் பட்டரை உள்ளது. இவரது மனைவி யாஸ்மின் கடந்த திங்கட்கிழமையன்று அவரது வீட்டிலேயே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் அணிந்திருந்த நகைகளும் பீரோவினுள் இருந்த நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இருவர் கைது
இந்த கொலை-கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலை நடந்த 2 நாட்களில் துப்பு துலங்கி கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் யாஸ்மின் பயன்படுத்திய செல்போன் மூலம் கொலையாளிகளை போலீசார் கண்டு பிடித்தனர். தவிர வீடு அருகே பெட்டிக்கடை வைத்துள்ள வியாபாரி ஒருவரும் கொலையாளிகள் பற்றி நல்ல தகவல் கொடுத்தார்.
ரகசிய செல்போன்
கொலை செய்யப்பட்ட யாஸ்மின் தனது கணவர் மற்றும் மகள்களுக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த தகவலை பெட்டிக்கடைக்காரர் கூறியதைத் தொடர்ந்து அந்த ரகசிய செல்போனை போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த செல்போனில் கொலை நடந்த அன்று யார், யார்? யாஸ்மினுடன் பேசி உள்ளனர் என்ற தகவலை சேகரித்து விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சென்னை செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரைச் சேர்ந்த கோபிநாத் (25) மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி என்ற ஜிம் மணி (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம்
அவர்களிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து கோபிநாத் போலீஸாரிடம் கூறுகையில்,
நானும், சுப்பிரமணியும் கொரட்டூரில் உள்ள ஜிம்' ஒன்றில் மாஸ்டராக பகுதி நேர வேலை பார்த்தபோது இருவரும் நண்பர்களானோம். அப்போது அங்கு வந்த தொழில் அதிபர் ஒருவர் யாஸ்மினிடம் நெருக்கமான உறவு வைத்திருந்தார். வீட்டில் யாஸ்மின் தனியாக இருக்கும்போது அந்த தொழில் அதிபர் யாஸ்மினிடம் உல்லாசம் அனுபவிப்பது வழக்கம்.
யாஸ்மினுடன் அறிமுகம்
அந்த தொழில் அதிபர்தான் எங்களை யாஸ்மினுக்கு அறிமுகப்படுத்தினார். யாஸ்மின் ஒரு உல்லாச பேர்வழி. அவர் தனது கணவர் தனக்கு சொந்த செலவுக்கு பணம் தரமாட்டார் என்றும், சொந்த செலவுகளுக்காக நான் இவ்வாறு மற்றவர்களுக்கு இன்ப விருந்து படைத்து, ரகசியமாக பணம் சம்பாதிக்கிறேன் என்றும் எங்களிடம் சொல்வார்.
நாங்கள் அடிக்கடி உல்லாசத்துக்காக யாஸ்மினை சந்திப்போம். இவ்வாறு சந்தித்தபோது, கடந்த வாரம் ஒரு நாள் தனது கணவர், பீரோவில் லட்சம், லட்சமாக பணம் வைத்துள்ளார் என்றும், நகைகளையும் பீரோவில் வைத்து பூட்டி வைத்துள்ளார் என்றும், ஆனால் எனக்கு செலவுக்கு பணம் கேட்டால் 20 ரூபாயை தருகிறார் என்றும் வருத்தப்பட்டார்.
கொள்ளை திட்டம்
யாஸ்மின் சொன்ன இந்த தகவல் தான் எங்களை இப்போது கொலைகாரர்களாக்கி விட்டது. திங்கட்கிழமை அன்று செல்போனில் பேசி எங்களை உல்லாசத்துக்கு அழைத்தார். நாங்கள் சென்றோம். உடனடியாக செயலில் இறங்கினோம்.
சுப்பிரமணி திடீரென்று யாஸ்மினை பின்பக்கமாக வளைத்து பிடித்து வாயை பொத்தினான். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க டி.வி.யை ஆன் செய்துவிட்டோம். கழுத்தை நான் இறுக்கினேன். இதில் யாஸ்மின் மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டார் என்று கருதி அப்படியே படுக்கையில் போட்டுவிட்டு, பீரோவை உடைத்து நகை-பணத்தை அள்ளினோம். இதற்குள் யாஸ்மின் மயக்கம் தெளிந்து சத்தம் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டேன். அதன் பிறகு காதில் கிடந்த கம்மலை கழற்ற, அது முடியவில்லை. இதனால் காதையே அறுத்து விட்டோம். அனைத்தையும் முடித்துக்கொண்டு, மாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்கமாக மதில் சுவர் ஏறி குதித்து வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பினோம். இவ்வாறு கோபிநாத் தனது வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆன்லைன் விபச்சாரம்
இதனிடையே கொலையாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்றவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அவற்றை இணை போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர்,
கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர் லியாகத் அலிக்கு தெரியாமல், ஆன்லைன் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக விபசாரம் செய்து வந்துள்ளார். வெளியில் இருந்து பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத்தும் உல்லாசத்துக்கு விட்டுள்ளார்.
யாஸ்மின் விபசாரம் செய்தது அவரது மகள்களுக்கு ஓரளவு தெரிந்துள்ளது. அவர்கள் கண்டித்துள்ளனர். விபசார தொழிலில் ஏற்பட்ட தொடர்பால் யாஸ்மின் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, மற்றும் கொள்ளை அடித்த நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த 2 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தனிப்படை போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்.நகர் கொலை வழக்கு
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் நெசப்பாக்கத்தில் பெண் கொலை செய்யப்பட்டதில் உள்ள பின்னணியைப் போன்று, இந்த வழக்கிலும் கொலை பின்னணி கதை உள்ளது. கலாசார சீர்கேடுகளால் இதுபோன்ற கொலை சம்பவம் நிகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications