பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா?- மார்கண்டேய கட்ஜூ

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தயான் சந்த் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருது பற்றி முன்னாள் நீதியரசரும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு சிக்கலான தருணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நபர்கள் நமக்குத் தேவை என்று தெரிவித்தார். அதுபோன்ற நபர்கள் மறைந்து விட்டிருந்தாலும், அவர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உண்மையான கதாநாயகர்களை மறந்துவிட்டு, மற்றவர்களை போற்றுவதாகவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டார்.
கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா?
கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று கூறிய அவர், அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு என்றும் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications