தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டது உண்மைதான்-உம்மன் சாண்டி ஒப்புதல்
புதன்கிழமையன்று மலையாள பத்திரிகை ஆசிரியர்களை கேரள முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தமிழ்நாடு - கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டமானது. ஒருபுறம், அணையால் ஏற்பட உள்ள ஆபத்து பீதியை ஏற்படுத்துகிறது. மறுபுறம், இந்த விவகாரத்தால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மலையாள மக்கள் அச்சத்துடன் வாழ்வது கவலை அளிக்கிறது.
தாக்குதல் நடத்தப்பட்டது
கேரளாவில் சில இடங்களில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது உண்மைதான். கேரளாவில் வாழும் தமிழக மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் குமுளி சோதனைச் சாவடியில் ஐயப்ப பக்தர்கள் உட்பட அனைவரையும் தடுத்து நிறுத்தியது உண்மைதான். ஆனால், ஒரு மணி நேரத்திலேயே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு யாரும் தடுக்கப்படுவது இல்லை.
தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதோ, அவர்களின் வாகனங்கள் மீதோ தாக்குதல் நடத்தினால், அது கேரளாவுக்குதான் பெரிய அவமானம்.
பதற்றம் ஏற்படுத்த கூடாது
அணை பிரச்னையை தீர்க்க, கேரளா மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கவில்லை. புதிய அணையை கட்டினால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று மின்சாரம் தயாரிக்க உள்ளதாகவும் தமிழ்நாட்டில் ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
எனவே, கேரளாவில் உள்ள பத்திரிகைகள், இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
அணை பிரச்னையை தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு கேரள அரசு எப்போதும் தயாராக உள்ளது. தமிழ்நாடு- கேரளா இடையே முதலில் அதிகாரிகள் மட்டத்திலும், பின்னர் அமைச்சர்கள் மட்டத்திலும், இறுதியில் இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. கேரள மக்களின் அச்சம் நீங்க, புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு. இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.