புது அணை தேவையில்லை- பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் மீண்டும் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு மாநிலத்தை விட்டே விரட்டப்பட்டு வருகின்றனர். அங்கு காலம் காலமாக வாழ்ந்த தமிழ்க குடும்பங்கள் உயிருக்கு பயந்து தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனர். இது தவிர சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும், அவர்களது வாகனங்களும் தாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் நள்ளிரவில் தாக்கி, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் அவர்கள் உடுத்த மாற்று துணி கூட எடுக்காமல் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து இரவோடு இரவாக தமிழகத்திற்கு வருகின்றனர்.
கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவது உண்மை தான் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியே ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து டி.ஆர். பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவையில்லை என்று மீண்டும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications