மூத்த தமிழறிஞர்களுக்கான பென்சன் ரூ. 2 ஆயிரமாக உயர்வு – ஜெ. உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
நிலைத்த பழமையும் வளரும் புதுமையும் இரண்டறக் கலந்து வாழும் மொழி தமிழ்மொழி. அது நமது ஆட்சி மொழி. தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஜெயலலிதா தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தமிழ் மொழியின் வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடு கொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின் தன்னலமற்ற தொண்டே ஆகும். அத்தகைய தமிழ் அறிஞர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜெயலலிதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கப்பட்டது
இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்காகவும், அயராது படுபட்ட தமிழ் அறிஞர்களைப் போற்றும் வகையில், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, திங்கள் தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இரண்டாயிரமாக உயர்வு
தமிழ் மொழி உயர்ந்து வாழ வேண்டும் மற்றும் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் அவர்தம் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.