இலங்கை கடற்படை கைது செய்த 22 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 22 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யுமாறு அந்நாட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் கடற்கரையிலிருந்து கடந்த 19ம் தேதி ரவிச்சந்திரன், தட்சிணாமூர்த்தி, ராஜகோபால், இபுராகிம்சா, வெங்கடேசன் ஆகியோரது படகில் சிவகுமார், செல்வம், கலியபெருமாள், தேவதாஸ், சர்க்கரை உட்பட 22 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் அடுத்த நாள் அவர்கள் கரை திரும்பவில்லை.
கடலில் பலத்த காற்று வீசிய காரணத்தினால் அவர்களது படகு இலங்கை நெடுந்தீவு மற்றும் கோபுரத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. இதனால் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜாய்மகிழ் மகாதேவன் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் உடனே விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க இலங்கை மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.