கேரளாவைக் கண்டித்து மதுரையில் பல ஆயிரம் விவசாயிகள் பேரணி- தபால் அலுவலகம் சூறை
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் விஷமப் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் ஒன்றை சூறையாடினர்.
மதுரையைப் பொறுத்தவரை வங்கிகள், அரசு நிறுவனங்கள் மட்டுமே இயங்கின. மருந்துக் கடைகள் திறந்திருந்தன. மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முக்கியக் கடைகள் நிரம்பியுள்ள மாசி வீதிகள், வெளி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் பந்த் நடப்பது போல காட்சி அளித்தது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து நடந்தாலும் கூட மதுரை நகர் முழுவதுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
மதுரை முழுவதும் கேரளக்காரர்களின் எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
பல ஆயிரம் விவசாயிகள் படையெடுப்பு
மதுரை மாவட்ட விவசாயிகள் முல்லைப் பெரியாறு நீரை நம்பி உள்ளவர்கள் என்பதால் மதுரையை நோக்கி பல ஆயிரம் விவசாயிகள் மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வேன்கள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என பல வாகனங்களிலும் திரண்டு வந்தனர்.
அனைவரும் தெப்பக்குளத்தில் கூடி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வந்தபோது அங்கிருந்த தபால் அலுவலகம் ஒன்றை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடினர். இதனால் தபால் அலுவலகம் பெரும் சேதத்தை சந்தித்தது.
கேரள அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.அதுவரை விடாமல் போராடுவோம், எங்களது உரிமையை விட மாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறினர்.












Click it and Unblock the Notifications