தமிழகத்துக்கு கூடுதல் ரயில் சேவை கோரி ரயில்வே அமைச்சர் திரிவேதியிடம் தமிழக எம்பிக்கள் கோரிக்கை
மதுரை: தமிழகத்துக்கு கூடுதல் ரயில் சேவை கோரி ரயில்வே அமைச்சர் திரிவேதியிடம் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2012ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் தங்கள் தொகுதிகளுக்கு தேவையான ரயில் திட்டங்களை வழங்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சி, எம்பிக்கள் மத்திய ரயில்வே அமைச்சர் திரிவேதியை தனித்தனியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
அதன்படி சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும். தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் இடையே உள்ள நிலுவை ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் தடம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். திருமழிசை ஓரகடம் வழியாக ரயில் திட்டம், கும்மிடிபூண்டியில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும்.
திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 4வது வழித்தடம் அமைக்க வேண்டும். சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், கும்மிடிபூண்டி இடையே ரயில் சேவையை அதிகரித்தல் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகள் ஆய்வு செய்து திட்டம் நிறைவேறும் வகையில் வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் திட்டங்களை சேர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திரிவேதி உறுதியளித்தார்.