பெங்களூரில் கடும்பனி: விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன
பெங்களூர்: பெங்களூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன், அபுதாபி விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. நேற்று லண்டனில் இருந்து 320 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கு வந்தது. அங்கு பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. காலை 9 மணிக்கு அது சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
இதே போன்று அபுதாபியில் இருந்து 168 பயணிகளுடன் வந்து விமானமும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது.
சென்னையில் தரையிறங்கிய் இந்த இரண்டு விமானங்களும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகே பெங்களூருக்குப் புறப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மட்டும் சென்னையில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றனர். அதனால் அவர்களுக்கு மட்டும் சென்னையில் குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் நடத்தப்பட்டது.