சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு திட்டத்தை கைவிடவில்லை: பிரணாப்
டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை, அதற்கு முன்னிரிமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர முடியவில்லை. அதற்காக நாங்கள் அதை முழுமையாக கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல.
கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் நாங்கள் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு-வணிகர் பேரமைப்பினர் உண்ணாவிரதம்:
இந் நிலையில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து வணிகர் பேரமைப்பு சார்பில் சென்னை, விழுப்புரம், திருச்சி, வேலூர் நகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இதேபோல் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.