ஆர்எஸ்எஸ் தொடர்பு: அன்னா, காங்கிரஸ் மாறி, மாறி குற்றச்சாட்டு
டெல்லி: அன்னா ஒரு ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் என்று காங்கிரஸும், காங்கிரஸுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று அன்னா குழுவினரும் மாற்றி மாற்றி குற்றம்சாட்டியுள்னர்.
இந்தி நாளிதழ் ஒன்றில் அன்னா ஹசாரே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நானாஜி தேஷ்முக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. கடந்த 1983ம் ஆண்டு அன்னா நானாஜி தலைமையில் பயிற்சி பெற்றதாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் பார்த்தவுடன் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டுவிட்டரில், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றார் அன்னா. தற்போது புகைப்படத்துடன் கூடிய செய்தியை நம்புவோமா அல்லது அன்னாவை நம்புவோமா? நான் சொன்னது தான் சரி என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் அன்னா குழு உறுப்பினர் கிரண் பேடி, நானாஜி தேஷ்முக்குடன் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஒருவருடன் ஒரே மேடையில் இருப்பதால் அவரை அந்த அமைப்பின் ஏஜென்ட் என்று கூறுவதா? அடுத்த முறை தனியாகத் தான் அமர வேண்டுமா? மேடையில் இருவர் சேர்ந்து அமர்ந்திருப்பதால் ஒருவர் இன்னொரு அமைப்பின் ஏஜென்டாகிவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு திக்விஜய் பதில் அளித்திருப்பதாவது, கோண்டா என்னும் இடத்தில் அன்னா ஹசாரேதான் ஆர்எஸ்எஸ் தலைவர் நானாஜியின் தலைமையில் பணிபுரிந்துள்ளார். நான் இல்லை. அன்னா ஹசாரே பற்றி ஆர்எஸ்எஸ் புத்தகம் வெளியிட்டுள்ளது. என்னைப் பற்றி இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அன்னா ஹசாரே, ஊழலை ஆதரிப்பவர்கள் தான் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதம் நடக்கவிருக்கிறது. அதே நாளில் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் வரும் 29ம் தேதி வரை உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் வரும் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை சிறை நிரப்பும் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை சுமார் 60,000 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.