தானே புயல் எதிரொலி-கடலுக்குப் போகாத தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி: கடலில் காற்று பலமாக வீசுவதாலும், புயல் எச்சரிக்கை காரணமாகவும் சென்னை, நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் சென்னை, ராமேஸ்வரம், கடலூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடலோர துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
படகுகளை நிறுத்திய மீனவர்கள்
சென்னை துறைமுகத்தில் இரண்டாம் கட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலூர், புதுவை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
எச்சரிக்கை நோட்டீஸ்
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீ்ன்பிடி துறைமுகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள 290க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதுபோல் ஆயிரக்கணக்கான நாட்டு படகுகளும் செல்லவில்லை. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
தானே புயலானது வரும் 30 ம் தேதி கடலூர் மற்றும் நெல்லூருக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.