லோக்பால் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுவது உறுதி: நாராயணசாமி
டெல்லி : திருத்தப்பட்ட லோக்பால் மசோதா 11 மணி நேர விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலங்களவையிலும் மசோதா விரைவில் நிறைவேறும் என்று பிரதமர் அலுவலக துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் மக்களவையைப் போன்று மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வலுவான லோக்பால் மசோதா கோரி சமூக ஆர்வலர்கள் போராடி வரும் நிலையில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நேற்றிரவு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது. இனி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படுட வேண்டும். ஆனால் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் அளவில் உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசுக்கு இல்லை. எனவே கூட்டணி கட்சிகளின் தயவை நாடவேண்டிய கட்டாயம் காங்கிரஸ் அரசுக்கு உருவாகியுள்ளது. மாநிலங்களவையில் தோல்வி ஏற்பட்டு விட்டால் மீண்டும் மக்களவைக்கு கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறுவதில் தாமதம் உருவாகியுள்ளது. இருப்பினும், மக்களவையைப் போல மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேருவது உறுதி என்று இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவுடன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். எங்களது கட்சி உறுப்பினர்கள் 71 பேர் மாநிலங்களவையில் உள்ளனர். கூட்டணி கட்சிகளிடமும் மசோதாவை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.
வலுவானதாக இல்லை
எனினும், லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான யஷ்வந்த் சின்கா, அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் 252 மற்றும் 253 சட்டப்பிரிவுகள் தெளிவாக்கப்படவில்லை. மாநிலங்களை கட்டுப்படுத்தும் சட்டப்பிரிவிலும் குழப்பம் நீடிக்கிறது. தொடக்கம் முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இதைத்தான் செய்து வருகிறது வலுவான மசோதா வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். என்றார்.