முல்லைப் பெரியாறு விவகாரம்- தமிழர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற சீமான் கோரிக்கை
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிமை கோரி போராடிய தமிழர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது கேரள அரசும், அந்த மாநில அரசியல் கட்சிகளும் அணையை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழக கூலித் தொழிலாளர்களை, மலையாளிகள் தாக்கி விரட்டினர். தமிழக பெண்கள் சிலரின் சேலைகளை பிடித்து இழுத்து அத்துமீறினர். தமிழக வாகனங்கள் அடித்து நொருக்கினர். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இப்படி பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது தாக்குதலைத் நடத்தினர். இதை கேரள அரசு தடுக்கவில்லை.
இதனையடுத்து தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஒரு சில மலையாளிகளின் நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் ஒரு மலையாளியை கூட யாரும் தாக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையை காக்க தமிழர்கள் அகிம்சை வழியில் உரிமைப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபிமன்பு கூறியுள்ளார். இது நியாயமான நடவடிக்கைதானா?
ஆனால் தமிழர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழக பெண்களின் சேலையை இழுத்து அத்துமீறிய, சபரிமலை சென்ற ஐயப்ப சுவாமி பக்தர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழக பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கிய மலையாளிகள் மீது அந்த மாநில காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லையே?
வன்முறையில் ஈடுபட்ட மலையாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே? தமிழக முதல்வரின் உருவப் பொம்மை கேரளாவில் கொளுத்தப்பட்ட போது, அதற்காக அங்கு ஒருவரும் கைது செய்யப்படவில்லையே?
தங்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது காவல் நிலையம் சென்று புகார் அளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர்களை 10 மணி நேரம் காவல் நிலையத்திலேயே அமர வைத்து அவமதித்தது கேரள மாநில காவல் துறை. அதன் எதிரொலியாக தான் திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மலையாளிகள் செய்யும் அராஜக செயல்களை குறித்து கேரள அரசு வழக்கு பதிவு செய்த நிலையில், தமிழகத்தில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன்?
சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா? மலையாளிக்கு இல்லையா? இங்குள்ள தென் மண்டல காவல் தலைமை ஆய்வாளர் ஒருவர், போராட்டக்காரர்கள் எல்லைப் பக்கம் வந்தால் அவர்களின் கை, கால்களை ஒடித்துவிடு என்று ஒலிபெருக்கி மூலம் காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் அந்த மாநில காவல் துறையினர் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே?
இங்கிருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேரியவர்கள் தான், கேரளத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேரியவர்கள் தான். ஆனால் நடவடிக்கையில் மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?
எனவே தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.