சுகுமாறன் நம்பியார் உடல் தகனம்: நிதின் கட்காரி நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியாரின் உடல் தகனம் திங்கட்கிழமை நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த பிரபல நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான எம்.என்.சுகுமாறன் நம்பியார் ஞாயிறுக்கிழமையன்று மாரடைப்பால் காலமானார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய, மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் அவரது வீட்டுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை காலை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காலை 10.15 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள சுகுமாறன் நம்பியாரின் வீட்டுக்கு வந்த அவர், சுகுமாறன் நம்பியார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஈடு செய்ய முடியாது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, சுகுமாறன் நம்பியார் கட்சிக்காக தீவிரமாக பாடுபட்டவர். தன்னை முழுமையாக கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். அவரது மறைவு தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமின்றி அகில இந்திய பாரதீய ஜனதா கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அவருடன் தேசிய செயலாளர் சதீஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய அலுவலக தொடர்பாளர் சண்முகநாதன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
இதன் பின்னர் சுகுமாறன் நம்பியாரின் உடல் வேனில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும் அவரது மகன் சித்தார்த் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் அவரது உடல் மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications