கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி- 5 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்போதுதான் முதல் முறையாக சொத்துக்கள் முடக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முடக்கப்படவுள்ள ஐந்து நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பு ரூ.223 கோடியாகும்.
அதில் டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 134 கோடி. கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மதிப்பு ரூ.22 கோடி, நிஹார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 1.1 கோடி, டி.பி. ரியால்டியின் ரூ. 52 கோடி மற்றும் எவர்ஸ்மைல் நிறுவனத்தின் ரூ. 13 கோடி சொத்துக்கள் முடக்கப்படுகிறது.
இது தொடர்பான அமலாக்கப் பிரிவின் உத்தரவை நிறைவேற்ற வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடித் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான உத்தரவில், கடன் அல்லது பங்குப் பத்திரங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்களின் வழியாக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
சாஹித் உஸ்மான் பல்வாவின் டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்துக்கு இந்தப் பணம் திருப்பியளிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சப் பணத்தை
கைமாற்றி விடுவதற்காகப் பயன்பட்ட நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் போலியானவை என்று அது கூறியுள்ளது.