சென்னையில் குவியும் குப்பைகளை அகற்ற புதிய நிறுவனம் ராம்கி நியமனம்
சென்னை: சென்னை மாநகரில் குப்பைகளை அகற்ற ராம்கி என்ற புதிய நிறுவனத்தை மாநகராட்சி ஒப்பந்தம் செய்து களம் இறக்கியுள்ளது. இந்த நிறுவனம் தனது குப்பை அள்ளும் பணியை திமுக தலைவர் கருணாநிதி வசித்து வரும் கோபாலபுரம் பகுதியிலிருந்து தொடங்கியுள்ளது.
சென்னையில் குவியும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ராம்கி என்ற புதிய நிறுவனத்தை மாநகராட்சி நியமித்துள்ளது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி ராம்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கோபாலபுரத்தில் குப்பை அள்ளும் பணியை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் பிடபிள்யூசி டேவிதார், ராம்கி நிறுவன அதிகாரி ராம்மோகன்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிறுவனம் 4 ஆயிரம் துப்புரவு ஊழியர்களை நியமித்துள்ளது. 1,500 சைக்கிள்கள், 5,200 குப்பை தொட்டிகள், 67 காம்பாக்டர் லாரிகள் வந்துள்ளன. அவசரமாக குப்பைகள் அள்ள 9 வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.
நேற்று 5 வார்டுகளில் குப்பைகள் அள்ளப்பட்டன. 30-ந்தேதிக்குள் 3 மண்டலங்கள் முழுவதும் குப்பை அள்ளும் பணி தொடங்கிவிடும்.
பணியை தொடங்கி வைத்து மேயர் சைதை துரைசாமி பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சுத்தமான சென்னையும், கை சுத்தமான மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையும். தற்போது 7 இடங்களில் குப்பைகளை சேகரித்து வைத்து அதன் பிறகு குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இனி நேரடியாகவே குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்ல முயற்சி எடுக்கப்படும்.
தரமான சாலைகள், தூய்மையான சென்னை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
சென்னை மாநகர மக்கள் தங்களது பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை 18004251566 என்ற இலவச தொலைபேசி மூலம் மாகநராட்சிக்குத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications