பாபர் மசூதி இடிப்பு ஒரு சாதாரண சம்பவம்: சுப்ரீம் கோர்ட்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 18 பேர் மீது சதித்திட்டம் தீட்டியதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சதி பிரிவு வழக்கை 2001ம் ஆண்டில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
பல வருடங்களாக நீடித்த இந்த வழக்கில் அவர்கள் மீதான குற்றச் சதி வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர்கள் மீதான பிற வழக்குகளை ரே பரேலி நீதிமன்றத்தில் வழக்காடுமாறும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே ஆகியோர் மீது குற்றச் சதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வழக்கை பிரித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டப்படி தவறு என்றும் கூறியது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே, சதீஷ் பிரதான், வினய் கட்டியார், அசோங் சிங்கால். கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட 21 பேருக்கு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்.
நீண்ட காலமாக நடந்து வரும் இந்த வழக்கு நீதிபதிகள் எச்.எல். தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல், "புகழ்பெற்ற' பாபர் மசூதி இடிப்பு வழக்கு'' என்று தனது வாதத்தைத் தொடங்கியதும், குறுக்கிட்ட நீதிபதிகள், இதில் புகழ்பெற்றது என்று சொல்ல என்ன இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு சம்பவமும் ஒரு சம்பவம் தானே தவிர அது ஒன்றும் பிரபலமான சம்பவமோ, புகழ் பெறாத சம்பவமோ அல்ல. நடந்தது ஒரு சம்பவம், இதில் தொடர்புடையதாகக் கூறப்படுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான் என்றனர்.
இந்த வழக்கில் சிலர் பதில் மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications