சிங்கப்பூருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை கடத்த முயன்ற 3 பேர் கைது
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அவ்விமானத்தில் மருத்துவ குணமுள்ள அரிய வகை கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக, சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுங்க இலாகா புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் அமீது(35), முகமது சிராஜூதின்(30), முகமது ரபீக்(35) உள்ளிட்ட 3
பேர் மீது புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். மேலும் 3 பேரும் கொண்டு வந்திருந்த அட்டை பெட்டியில், சிங்கப்பூரில் உள்ள உறவினருக்கு வஞ்சிரம் மீன் கருவாடு கொண்டு செல்லவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த அட்டை பெட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதற்குள் 130 கிலோ எடையுள்ள கடல் குதிரைகள் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கிடைக்கும் கடல் குதிரைகள், வெளிநாடுகளில் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கடல் குதிரைகள் அழிந்து வரும் மீன் வகைகளில் ஒன்று என்பதால், வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.