மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்-200 படகுகள் சேதம்-8 மீனவர்கள் சிறை பிடிப்பு
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்று விட்டனர். பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இந்த அடாத செயல் பெரும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
600க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் காட்டுமிராண்டிகள் போல கற்களை வீசித் தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய பின்னர் பார்த்தபோது பாக்கியம்ஜோசப், ராஜமாணிக்கம், மாரியப்பன், விஜயகுமார், சின்னையா, செல்வராஜ், தமிழ்ச்செல்வம், மலைச்சாமி ஆகிய 8 மீனவர்களை காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. அங்கு என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அந்தப் பேச்சுக்குக் கிடைத்த 'மதிப்பாக' இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
தாக்குதலிலிருந்து தப்பி வந்த மீனவர்களில் ஒருவரான ஜஸ்டின்கூறுகையில், கற்களை தாறுமாறாக எங்கள் மீது எறிந்து இலங்கைப் படையினர் தாக்கினர். பெரிய பெரிய கற்களை அவர்கள் எடுத்து வந்து வீசினர். மேலும் மீன்பிடி வலைகளையும் அவர்கள் அறுத்துக் கடலில் போட்டனர் என்றார்.
தாக்குதலில் ஜெகதீசன் என்ற மீனவரின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.