நவீன தொழில் நுட்ப ஆலை : மூடு விழா காணும் சிறு அரிசி ஆலைகள்
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நவீன தொழில்நுட்ப அரிசி ஆலைகளால் பழமையான அரிசி ஆலைகள் மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில பிரதான தொழில் விவசாயமாகும். பாபநாசம் அணையின் முலம் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை அரிசியாக்குவதற்கு 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் படிப்படியாக தொடங்கப்பட்டன. இவற்றுக்கு தேவையான தொழிலாளர்கள் தட்டுபாடின்றி இருந்தனர். அறுவடையான நெல் ஆலையின் தொட்டியில் போட்டு தண்ணீரில் ஊற வைக்கப்படும். பின்னர் கொதிகலனில் அவித்து உலர்த்தப்படும். உலர்த்தப்பட்ட நெல்லை அறுவை இயந்திரங்கள் மூலம் அரிசியாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவர். இதனால் 24 மணி நேரமும் அரிசி ஆலைகளில் பணி நடைபெற்று வந்தன. தொழிலாளர்களுக்கும் தட்டுபாடின்றி வேலை கிடைத்து வந்தது. இந்த முறையில் தயாரான அரிசியால் சமைக்கப்படும் சாப்பாடு சுவையாகவும், சத்துடையதாகவும் இருந்து வந்தது.
நவீன அரசி ஆலைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் நவீன அரிசி ஆலைகள் அதிக முதலீட்டில் துவங்கின. அங்கு நெல்லை கொடுத்த ஒரு மணி நேரத்தில் அரிசியாக கிடைத்தது. இதனையடுத்து ஏராளமானோர் நவீன ஆலைகளை நாடத் தொடங்கினர்.
இவற்றுடன் சிறிய அரிசி ஆலைகளால் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டதால் பல ஆலைகள் படிப்படியாக மூடப்பட்டன. அரிசி ஆலை உரிமையாளர்கள் மாற்றுத் தொழிலை சிந்திக்க துவங்கி விட்டனர். இதனால் இந்த அரிசி ஆலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிழைப்புத் தேடி வேறு ஊர்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.