ஜனவரி 30 - ல் தமிழ்நாடு சட்டப்பேரவை : ஆளுநர் உரையுடன் தொடக்கம்
சென்னை : தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கட்கிழமை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரோசய்யா, பேரவையில் உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஜூன் மாதம் சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர், ஆகஸ்ட்டில் தொடங்கி செப்டம்பரில் முடிவடைந்தது. பின்னர், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம், டிசம்பர் 15ந் தேதி நடந்தது. இதையடுத்து, பேரவை கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 30ல் கூட்டம்
இந்நிலையில், 2012ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டம், வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று பேரவையில் ஆளுநர் உரையாற்றுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரோசய்யா, முதல்முறையாக சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்.
முக்கிய அறிவிப்புக்கள்
கடந்த ஆண்டில் அரசு செயல்படுத்திய திட்டங்கள், மாநிலம் முழுவதும் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறும் என தெரிகிறது. தானே புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்வது குறித்தும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆளுநர் உரையில் இடம் பெறும் என கூறப்படுகிறது. கவர்னர் உரையுடன் அன்றைய கூட்டம் முடிந்துவிடும். பின்னர் பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என விவாதித்து முடிவு செய்யும். அதன்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் நடக்கும். விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுவார்.
இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என்று தெரிகிறது. சட்டசபை கூடுவதை முன்னிட்டு பேரவை கூடத்தை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது