35 ஆண்டுகளாக பெண் வயிற்றில் இருந்த 'கல் குழந்தை' அகற்றம் !
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டியின் வயிற்றில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்ததால் கல்லாய் மாறிய குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் மோமி நகரைச் சேர்ந்தவர் அனந்தம்மா (70). அவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர். பிறகு அந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இது குறித்து அனந்தம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது,
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அனந்தம்மா கருத்தரித்துள்ளார். 2 மாதம் ஆனபோது அந்த கரு பாலோப்பியன் குழாய் வழியாக வயிற்றுப் பகுதிக்குச் சென்றுவிட்டது. அங்கு ரத்த ஓட்டம் இல்லாமல் குழந்தை இறந்தது. இறந்த குழந்தையின் மீது அதிக அளவில் கால்சியம் படிந்ததால் அது கல் போன்று ஆகிவிட்டது என்றார்.
இது குறித்து அனந்தம்மா கூறுகையில், நான் முதல் முறை கருத்தரித்தபோது 2 மாதம் கழித்து கருப்பையில் குழந்தை இல்லை. அதனால் கரு கலைந்துவிட்டது என்று நினைத்தேன். அதன் பிறகு நான் மறுபடியும் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். அப்போது கூட என் வயிற்றில் இறந்த குழந்தை இருப்பது தெரியாமல் போனது என்றார்.
பெத்த மனம் பித்து, பி்ள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் இங்கோ, பிள்ளையே கல்லாகிப் போனது வினோதமாக உள்ளது.