சம்பவம் நடந்தது இரு பக்கமும், ஆனால் நடவடிக்கை எங்கள் மீது மட்டும்தான்- பண்ருட்டியார்
இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,
எங்களது கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுத்து, 10 நாட்களுக்கு அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இன்னும் சில நிபந்தனைகளையும் போட்டு, அறிக்கை கொடுத்தார்கள்.
இந்த அறிக்கை தீர்மானமாக வந்தபோது, அதில் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. எந்தக் குழுவும் அறிக்கையை சட்டமன்றத்தில் தருகின்றபோது, அது சட்டமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கருத்து கூற உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் வற்புறுத்தி கேட்டபோது, அந்த உரிமை மறுக்கப்பட்டது.
தங்களிடத்திலே பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்தினால், விவாதமே இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1ம் தேதியன்று நடந்த சம்பவத்திலே இரண்டு பக்கத்திலேயும் கூச்சலும், குழப்பமும் இருந்தது. சம்பவம் நடந்தது இரண்டு பக்கமும். நடவடிக்கை எடுத்தது எங்கள் கட்சி மீது மட்டும்தான். ஆகவே இந்த நடவடிக்கை முறையானது அல்ல என்பதை எடுத்துச் சொல்லவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இன்றையக் கூட்டத்தொடரில் (நேற்று) இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார் பண்ருட்டியார்.