மிலாடி நபி திருநாள் – ஜெ., கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இஸ்லாம் பெருமக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்த்து
தமிழக முதல்வர் விடுத்துள்ள வாழத்துச் செய்தியில், உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் போதனையாகும்.
அன்னாரின் பிறந்த நாளான இன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் என்று கூறி இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள் பெருமான் அறப்போராளியாக, வணிகராக, அரசியல்வாதியாக, பேச்சாளராக, சீர்த்திருத்தவாதியாக, அனாதரட்சகராக, அடிமைகளைக் காப்பவராக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக, நீதிபதியாக, துறவியாக வாழ்ந்தவர்; நேர்த்தியான இத்தகைய நிலைகள் அனைத்திலும் மனித நேயம் சிறந்திட வழிகாட்டும் மாமனிதராகவே திகழ்ந்தவர். அவர் தம்மை இழிவுபடுத்திய மக்களின் செயல்களைப் பற்றிக் கவலைப்படாமல், மனித இன மேம்பாட்டுக்காகவே பாடுபட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில் இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வற்புறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு இந்த நபிகள் நாயகம் பிறந்த நாளில் அவர்கள் எல்லாத் துறையிலும் மேம்பாடு அடைய தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.
வைகோ வாழ்த்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடன் உத்தமத் திரு நபிகள் (ஸல்) நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது. காலம் காலமாகச் சமூக ஒற்றுமையைப் பேணிக் காத்து வரும் தமிழ்ச் சமூகச் சூழலில் சமய நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications