பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் கருணாநிதியின் மகன்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்தது.

மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன், சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது:

கழகம்தான் குடும்பம் என்று அண்ணா பேசினார். அதைக் கருணாநிதி பின்பற்றி வருகிறார். கருணாநிதி இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கருணாநிதியின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கருணாநிதியை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று மு.க. ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார் .

இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை தொடர்ந்து பேசக் கூடாது என்று கூச்சலிட்டனர்.

அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகமும் அவர்களை மீறி பேச முயற்சித்தும் பலனில்லை. இதனால் அமளி நீடித்து வந்தது.

இதைக் கட்டுப்படுத்த எழுந்த க. அன்பழகன் பேச்சும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

க. அன்பழகன் பேசியதாவது:

கருணாநிதி என் நண்பர். அவரின் பிள்ளைகள் என் பிள்ளைகள். இருப்பினும் ஒருவரை மட்டுமே அடையாளப்படுத்தி முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வீரபாண்டி ஆறுமுகம் எப்போதும் தன் கருத்துகளை ஒளிவு மறைவு இல்லாமல் முன்வைக்கக் கூடியவர். கருணாநிதி தன் தலைவர் என்கிற முறையில்தான் அவரிடம் தன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். அதில் தவறு ஒன்றுமில்லை. வீரபாண்டி ஆறுமுகம் திமுகவுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.

திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை. மடாதிபதி பதவியை ஸ்டாலினுக்குக் கொடுப்பதற்கு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். என்னை விட வயது குறைவான கருணாநிதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்னுடைய வீட்டார் என்னை மதிப்பார்களா என்றுகூட நினைத்திருக்கிறேன்.

பிறகு நானே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கருணாநிதி அளவுக்கு அறிவுப்பூர்வமானவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழர்களைக் காப்பாற்ற திமுக தவிர்த்த வேறு இயக்கம் இல்லை. 1967-ல் இருந்து பொதுக்குழு பார்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த க. அன்பழகனா இப்படி பேசியது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் குமுறியுள்ளனர்.

தயாநிதிக்கும் எதிர்ப்பு

முன்னதாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான தயாநிதி மாறனுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் அவர் பேசுகையில், "18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்களிடம் கட்சியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதைச் செய்யாமல் இருக்கிறோம். இணையம், ஃபேஸ்புக் போன்றவை மூலமாகவே இளைஞர்களிடம் நம் கருத்துகளைச் கொண்டு செல்ல முடியும்.

இதற்காக போர்க்கால அடிப்படையில் ஒரு புதிய அணி அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை இணைய தளம் மூலமாக நாம் கொண்டு செல்லாததன் காரணமாகத்தான் தோற்றோம். அந்த வெற்றிடத்தை நாம் நிரப்ப வேண்டும்," என்றார்.

இதற்கு திருச்சி சிவா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "தயாநிதி மாறன் இணையதளம் பற்றி எல்லாம் பேசினார். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்களது சன் தொலைக்காட்சியில் கட்சி செய்திகளைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டுவதுபோல முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து வெளியிடட்டும்.

ஆ.ராசாவை திமுக கைவிட்டுவிடக் கூடாது. ராசாவின் சகோதரர் கடந்த வாரம் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. ராசா திமுகவுக்காகப் பாடுபட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது," என்றார்.

தி.மு.க. பொதுக்குழுவில் அரசியல் வாரிசுகளிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+