உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரம்
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி உரிமங்களை பறிகொடுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய பிரபல வழக்கறிஞர்களை வளைக்க ஆரம்பித்துள்ளன.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 122, 2ஜி உரிமங்களையும் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து உரிமங்களைப் பறி கொடுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மும்முரமாகியுள்ளன. இதற்காக பிரபலவக்கீல்களை அவர்கள் அமர்த்தி வருகின்றனர்.
உரிமத்தைப் பறிகொடுத்த டாடா டெலிசர்வீசஸும் அல்லையன்ஸ் இன்ஃப்ரா டெக் நிறுவனமும் ஹரீஸ் சால்வேயையும், ஐடியா நிறுவனமானது சி.எஸ். வைத்தியநாதனையும், லூப் நிறுவனம் ஆர்யமா சுந்தரத்தையும் உச்சநீதிமன்றத்தில் வாதாட ஏற்பாடு செய்துள்ளன. இதேபோல் சட்ட ஆலோசனை நிறுவனங்களும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக களம் இறங்கியுள்ளன.
உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய நிறுவனங்கள் அனைத்தும் "தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. எமது முதலீடுகளை நிச்சயம் பாதுகாப்போம்" என்ற பல்லவியையே பாடி வருகின்றன.
தீர்ப்பு மாறுமா என்ன?
உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பை நிச்சயமாக மாற்றிக் கொள்ளும் என்று இந்நிறுவனங்கள் நம்பினாலும் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவுதான் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
மேல்முறையீட்டு மனு என்பது ஒரு சிறிய வாய்ப்புதான். பல நேரங்களில் விசாரணைக்குக் கூட எடுக்கப்படாமலேயே போகலாம்" என்கிறார் சட்ட வல்லுநர் வைத்தியநாதன்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பக்கம் நியாயம் இருக்கும் சூழலில் விசாரணைக்கான வாய்ப்பு கிடைக்கும் நிலைமை இப்போது அப்படி இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது இப்போது அவசியமாக இருக்கிறது என்பதும் வைத்தியநாதனின் கருத்து. இதே கருத்தையே மூத்த சட்ட வல்லுநர் கே.டி.எஸ். துளசியும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை உச்சநீதிமன்றம் தற்போது தெரிவிக்கவில்லை. இப்போது மேல்முறையீட்டு இந்நிறுவனங்கள் செல்லும் நிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதும் சட்ட ஆலோசகர்களின் கருத்து.