இரட்டிப்புப் பணம் தருவதாக 1200 பேரிடம் ரூ. 13 கோடி சுருட்டிய பாதிரியார் கைது
திருவள்ளூர்: தம்மிடம் கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகக் கூறி பல ஆயிரம் பேரிடம் ரூ13 கோடி மோசடி செய்ததாக அந்தோணி என்ற பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர். .
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள இம்மானூவேல் தேவாலயத்தில் பணியாற்றி வந்தவர் அந்தோணி. பட்டாபிராமில் "ஹெவன்லி இண்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்" என்ற அறக்கட்டளையை 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினார். அறக்கட்டளையாக இதன் பெயர் இருந்தாலும் சீட்டுக் கம்பெனியாகவும் நடத்தி வந்தார்.
மேலும் ஏஜெண்டுகளை நியமித்து பாதிரியாரிடம் பணம் கொடுத்தால் இரட்டிப்புத் தொகையாக திருப்பித் தருவார் என்று அப்பகுதியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.
பாதிரியார் நியமித்த ஏஜெண்டுகளின் எண்ணிக்கை 105. பாதிரியாரிடம் பணம் கொடுத்தவர்கள் எண்ணிக்கை 12, 500. வசூலிக்கப்பட்ட தொகையோ ரு 13 கோடி! ஆனால், எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் இரட்டிப்புத் தொகை மட்டுமல்ல வசூலித்த பணத்தைக் கூட திருப்பிக் கொடுக்கவில்லை பாதிரியார்.
பாதிரியாரால் ஏமாந்து போனவர்கள் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் நடவடிக்கையில் மூன்று ஏஜெண்டுகள் சிக்க கடையில் பாதிரியார் அந்தோணியும் பிடிபட்டார். மாட்டிக் கொண்ட அந்தோணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் பொறுப்பாளராக இருக்கும் அறக்கட்டளையின் தலைவர் ஜான்பிரபாகரன் ஆந்திராவில் சிறையில் இருக்கிறார் என்றும் அவரும் இரட்டிப்புப் பண மோசடி வழக்கில் கைதானவர் என்றும் கூற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஜான்பிரபாகரிடம் விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.