மன்னிப்பு, இல்லாவிட்டால் ரூ.15 கோடி நஷ்ட ஈடு... மேயர் சைதை துரைசாமிக்கு மா.சு. நோட்டீஸ்
சென்னை: தனது பெயருக்கும், புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் கூறியதற்காக ரூ. 15 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி சென்னை மாநகராட்சி மையர் சைதை துரைசாமிக்கு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியனின் வ்ககீல் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் 22ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில், அடையாறு ரிவர்வியூ சாலை விரிவாக்கம் மற்றும் கோட்டூர்புரம் மேம்பாலம் அருகே பூங்கா அமைக்கப்பட்டது குறித்து, தாங்கள் என் கட்சிக்காரர் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கீறீர்கள்.
அதில் உண்மைக்கு புறம்பான தகவல்களை நீங்கள் தெரிவித்து இருக்கிறீர்கள். ஒரு சிலர் ஆதாயம பெற வேண்டும் என்பதற்காக பூங்காக்கள் அமைக்கப்படவில்லை. இதில் உண்மை நிலை அறிய வேண்டுமென்றால், நீங்கள் நேரில் ஒரு நாள் ரிவர்வியூ சாலைக்கு வந்து கூட்டு சோதனை நடத்தலாம். இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. எனது கட்சிக்காரர் மீது நீங்கள் வேண்டுமென்று, பொய்யான தகவல்களை கூறியுள்ளீர்கள்.
இதுபற்றி பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. இதனால், எனது கட்சிக் காரரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனது கட்சிக்காரர் மீது வேண்டுமென்று அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யாக குற்றச்சாட்டு கூறியுள்ளதால், இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை 24 மணி நேரத்துக்குள் நீங்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் உங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். இதுதவிர, ரூ.15 கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.